Last Updated : 30 Mar, 2023 02:31 PM

 

Published : 30 Mar 2023 02:31 PM
Last Updated : 30 Mar 2023 02:31 PM

துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ மார்ச் 30 - ஏப்.5

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், குரு - களத்திர ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், ராகு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்கள்: துலா ராசியினரே! இந்த வாரம் எதிலும் லாபமான நிலை காணப்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு பாராட்டு பெறுவீர்கள். எதிலும் தயக்கமோ பயமோ இருக்காது. தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம்.

தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் கூடுதலாக உழைப்பதன் பேரில் கிடைக்கும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய முற்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சில்லறை பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் மூலம் மதிப்பு உயரும். நண்பர்கள் மூலம் நன்மை உண்டாகும்.

பெண்களுக்கு தன்னம்பிக்கையுடன் துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினர் இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்திலிருந்து சந்தோஷமான செய்தி வரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். கல்விக்கான செலவு கூடும்.

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்குவது சுபிட்சத்தை தரும். இல்லறத்தில் இருந்த சச்சரவு தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், ராகு - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்கள்: விருச்சிக ராசியினரே இந்த வாரம் பலவிதத்திலும் பணவரத்து உண்டாகும். ஆனாலும் சுபச்செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. ஆரோக்கியம் சம்பந்தமான குறைபாடு வரலாம்.

தொழில் வியாபாரத்தில் வேகமான முன்னேற்றம் இருப்பது கடினம். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சுபகாரியங்கள், மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். அதேநேரத்தில் கணவன், மனைவிக்கிடையே ஏதேனும் மனவருத்தம் ஏற்படலாம்.

பெண்களுக்கு தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நல்லபடியாக நடந்து முடியும். கலைத்துறையினர் கடுமையாக உழைப்பின் மூலம் முன்னேற வேண்டி இருக்கும். அரசியல்வாதிகள் வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு பாடங்களை கவனமாக படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

பரிகாரம்: மாரியம்மனை வணங்க எல்லா துன்பமும் நீங்கும். மனநிம்மதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், புதன், வெள்ளி

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம், 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் சூரியன், குரு - பஞ்சம ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், ராகு - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்கள்: தனுசு ராசியினரே! இந்த வாரம் பத்தாமிடத்தை ராசிநாதன் குரு பார்ப்பதால் சில குழப்பங்கள் நேர்ந்தாலும் இதுவரை நடக்காமல் இருந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து மனநிம்மதி அடைவீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடந்து முடியும். முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம் நன்கு நடக்க தேவையான உதவிகள் கிடைக்கும். வாடிக்கையாளர் தேவை அறிந்து பொருள்களை அனுப்பி அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை செய்து முடித்து நிர்வாகத்தில் நல்ல பெயர் பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் விரும்பும் பொருள்களை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள்.

பெண்களுக்கு இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலமிது. அரசியல்வாதிகளுக்கு இனிமையான செய்திகள் தேடி வரும். மாணவர்களுக்கு சகமாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தி அஷ்டகம் படித்து தட்சிணாமூர்த்தியை வணங்கி வருவதால் பணகஷ்டம் தீரும். கல்வியில் வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ மார்ச் 30 - ஏப்.5 வரை

> மேஷம், ரிஷபம், மிதுனம்
> கடகம், சிம்மம், கன்னி
> துலாம், விருச்சிகம், தனுசு
> மகரம், கும்பம், மீனம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x